Thursday 7 July 2016

கல்வியாளர்கள் சங்கமம் – 2016
காரைக்குடி


ஆசிரியர்களால். . .  மாணவர்களுக்காக


என் வகுப்பறை. . . . .






 


கி.லோகநாதன், எம்.ஏ.,எம்.ஏ.,பி.எட்.,எம்.ஃபில்.,
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றி நடுநிலைப் பள்ளி
சென்னசமுத்திரம் / 632 506
திமிரி ஒன்றியம் (வே.மா.)

செல்பேசி : 9150312721 / 9789594178
E-Mail : logakrish69@gmail.com, teacherloga.blogspot.in



என் வகுப்பறை

       கல்வி சிறந்த தமிழ்நாட்டில் வரலாற்று புகழ்மிக்க வேலூர் மாவட்டத்தில் திமிரி ஒன்றியம், சென்னசமுத்திரம் நடுநிலைப்பள்ளி வரலாறு பட்டதாரி ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய ஒட்டு மொத்த பணிக்காலம் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் ஒவ்வொரு நாளும் வகுப்பறை என்பது செயல்படும் வகுப்பறையாக மாற்ற என்னால் ஆன சிறுசிறு முயற்சிகள் மேற்கொள்வதுண்டு.
       வரலாறு கடந்த கால நிகழ்வுகளை அவற்றுடன் தொடர்புடைய மனிதர், இடம், காலம் இவற்றுடன் தொகுத்தளிக்கிறது. எனவே, மனிதர், இடம், காலம் ஆகிய மூன்று கூறுகளும் வரலாற்றுக்கு மிகவும் முக்கியம். ஒரு நிகழ்வில் மூன்று கூறுகளும் ஒன்று இல்லை எனினும் அது வரலாறாகாது. எந்த வரலாற்றுக்கருத்தும்
Ø  நிகழ்வு என்ன?
Ø  நிகழ்த்தியவர் / நிகழ்வில் பங்குகொண்டவர் யார்? (மனிதர்)
Ø  எங்கு நிகழ்ந்தது? (இடம்)
Ø  எப்பொழுது நிகழ்ந்தது? (காலம்)
என்ற நான்கு வினாக்களுக்கும் விடைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை.
அப்படி வரலாற்று நிகழ்ந்து இடம் நபர் பற்றிய பாடம் 8 ஆம் வகுப்பில் ஐரோப்பியர்கள் வருகைக்குப்பிறகு ஆங்கிலேய பிரெஞ்சு ஆதிக்கப்போட்டியில் “இரண்டாம் கர்நாடகப் போர்“ என வரலாறு சொல்கின்ற பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த கர்நாடக நவாப் சந்தா சாஹிப்பை ஆங்கிலேய, இராபர்ட் கிளைவ் ஆற்காட்டை முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். முகம்மது அலியை ஆற்காட்டின் நவாப் ஆக்கினார். எனவே ராபர்ட் கிளைவ் “ஆற்கட்டு வீரர்“ என பெருமையோடு அழைக்கப்பட்டார், என பாடப்பொருள் இயம்பும்.
இப்பேர்பெற்ற ஆற்காட்டில் ஒரு பெரிய கேட் ஒன்று நிறுவி நாளைக்கு டெல்லிக்கு செல்வதற்கான வாயில் இதுதான் என்று பொருள்பட டெல்லிகேட் ஒன்றை கட்டமைத்தார். இவ்விடத்தை காண செல்லலாம் என 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூறினேன். அவர்களும் எப்போது செல்வோம் என்று மிகவும் ஆவலாக இருந்தனர். அந்நேரத்தில் சில வட்டார அளவில் (SSA) சில பயிற்சிகள் நடைபெற்றன போதுமான ஆசிரியர்கள் பள்ளியில் இல்லாத காரணத்தினால் ஒரு வாரம் தள்ளிபோனது.
மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் பயிலும் மாணவரின் பெற்றோர் ஒருவர் லோடு லாரி (207) வைத்திருக்கிறார். சார் நாம் அதில் போகலாம். என்னுடைய பெயரை அவரிடம் சொல்லி “சார் லாரி கேட்கிறார் ஆற்காட்டு  வரை செல்ல வேண்டும்“ என கூறுகின்றனர். (எங்கள் பள்ளியிலிருந்து ஆற்காடு 28 கி.மீ) அவரும் ஒப்புக்கொள்கிறார். எரிபொருள் தேவைக்கு மட்டும் (டீசல்) காசு கொடுத்தால் போதும் என்கிறார்.  பிறகு ஏதாவது கொடுங்கள் நாளை வருகிறேன் என சொல்லிவிட்டுச் சென்றார். பின் மறுநாள் லாரியில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (33 மாணவர்கள்) அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியருடன் சென்றோம். வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பார்த்ததில் மாணவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. மாணவர்கள் கி.பி.1752க்கு சென்றுவிட்டனர். சார் இங்கேதான் சந்தாசாஹிப் இருந்தானா? பிரெஞ்சுக்காரர்கள் எத்தனை பேர் இருந்தனர்? ஆங்கிலேயப் படைகள் எத்தனை பேர் இருந்தனர்? நவாப் என்றால் என்ன? அக்காலத்தில் “ஆற்காடு தலைநகராக விளங்கியதா? என அவரவர்க்கு தோன்றி கேள்விகள் மாணவர்களிடம் வந்தது? பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டனவா? இவ்விடம் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரிக்கப்படுகிறது என்ற தகவல்களையும் பெற்றனர்.
இப்படி களப்பயணமாக சென்ற நேரத்தில் AEEO எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அப்பொழுது அவர்கள் ஆசியர்களிடம்  அனுமதி இல்லாமல் களப்பயணம் செல்லக் கூடாது? என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன? என பல கேள்விகள் கேட்டுவிட்டு சென்றார். அன்று பிற்பகல் நாங்கள் பள்ளிக்கு வந்துவிட்டோம். அவர்கள் கேட்ட சில கேள்விகள் நியாயமானவைதான் என்றாலும் எங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.
தம் பாடத்தில் வரும் நிகழ்வுகளின் வரலாற்று இடத்தை மாணவர்கள் பார்த்தார்கள் என்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதா?  இல்லை கல்வி அலுவலர் இதுபோன்ற செயல்கள் வருங்காலங்களில் செய்யக்கூடாது. மாணவர்களை அழைத்துச் செல்வது என்பது என்னுடைய அனுமதியின்றி நடக்கக்கூடாது என்ற வேதனையை வெளிப்படுத்துவதா? என்று தெரியவில்லை, இருப்பினும் தலைமையாசிரியரின் ஒத்துழைப்பு முழு அளவில் இருந்தபடியால் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறி முடிந்தன. அதுவல்லாமல் மாணவர்களின் தீவிர முயற்சியும் அவர்களாகவே திட்டமிட்டு செய்த பயணம் என்பதால் கூடுதலாகவே தாம் இணைத்துக்கொள்ள ஏதுவாக அமைந்தது.
“ஒரு நிகழ்விலிருந்து நூறு படிப்பினைகளைக் கற்றுக்கொள்கிறவன் அறிவாளி, ஆனால் நூறு நிகழ்வுகளிலிருந்து ஒரு படிப்பினையையும் கற்காதவன் அறிவிலி“ என்பார் அறிஞர்.
அதுபோல வரலாறு என்பது நிகழ்வுகள் நிறைந்தது. ஒவ்வொரு நிகழ்வும் படிப்பவரின் சூழலுக்கேற்ப நிறைய படிப்பினைகளைக் கற்றுத்தரவல்லது. வரலாற்று வகுப்பறையும் அதற்கும் ஒரு படிமேலே நிற்கிறது. வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக வரலாறு பார்க்கப்படுகிறதே தவிர வாழ்விற்குதவும் படிப்பினைகள் நிறைந்த பெட்டகமாக கருதப்படுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதுபோன்று வகுப்பறை அனுபவ நிகழ்வுகள் மேலும் மேலும் கற்றலை நிலைப்படுத்த அதன் வழியாக வரலாற்றுக் கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ள இயலும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
      
‘ நன்றி ‘








                                


























                              


              





                                        













                                     














                                       

Sunday 10 April 2016

தெருக்கூத்து வரலாறு (தொண்டை மண்டலம்)




பதிவரின் பெயர்
:
கி.லோகநாதன் M.A.M.A.B.Ed.,M.Phil. Phd.
தலைப்பு
:
தெருக்கூத்து – வரலாறு
(தொண்டை மண்டலம்)

முகவரி
:
இனியகம்
23,மாருதிபுரம்
திமிரி – 632 512.
வேலூர் மாவட்டம்.


வலைப்பதிவு

teacherloga.blogspot.in
மின்னஞ்சல்
:
அலைபேசி எண்
:
9789594178
9150312721





















           
தெருகூத்து வரலாறு (தொண்டை மண்டலம்)

       தமிழகத்தின் மிகப்பழமையான அரங்கக்கலை வடிவம் தெருக்கூத்து ஆகும். தெருக்களையே ஆடுகளமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் தெருக்கூத்து எனப் பெயர் பெற்றது. ஒரு கதையைப் பாடியும் ஆடியும் உரையாடியும் நடித்து நிகழ்த்தப்படும் கலையாக இது விளங்குகிறது.
       தெருக்கூத்து 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பரவலாக இடம் பெறலாயிற்று. ஆரியமயமாக்கல் காரணமாக தமிழகத்தின் சிறு தெய்வங்கள் பல ஆரியத் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. தென்னிந்தியாவில் தெருக்கூத்து (தமிழ்நாடு) கதகளி (கேரளம்) யகஷகானம் (கன்னடம்) தெய்வம் (கேரளம்) பூதம் (கன்னடம்) முடியேற்று (கேரளம்) முதலிய வடிவங்கள் உள்ளன. ஒரு புராதன வடிவத்திலிருந்தே பின்னர் இவை பிரதேச ரீதியாக பிரிந்திருக்க வேண்டும் என்ற ஓர் கருத்துமுண்டு. இவற்றிடையே ஒப்பனை, உடை, மேடை செயற்பாடு, உள்ளடக்கம், அமைப்பு சடங்குத்தன்மை என்பனவற்றில் பெரும் ஒற்றுமை காணப்படுகிறது.

தொண்டை மண்டலத்தில் தெருக்கூத்து
       தொண்டை மண்டலம் என்பது பழைய வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு (இன்றைய வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது) இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மத்தியில் திரௌபதி அம்மன் வழிபாடு பிரபலமானது. இப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் 29 அல்லது 21 அல்லது 20 நாள்கள்  (பொருளாதார வசதிக்கேற்ப நாள்கள் எண்ணிக்கை கூடும் குறையும்) சடங்கு நடைபெறும். இச்சடங்கில் தெருக்கூத்து இடம் பெறுகின்றது. இக்கூத்து கோயில் முன்றலில் மேடையிடப்பட்டு கூத்தாக நடைபெறும். அதே நேரம் கூத்துப் பாத்திரங்கள் திரௌபதி அம்மன் கோயில் கிரியைகளுடன் இணைகின்றன.
       திரௌபதி அம்மன் வழிபாடு தெருக்கூத்துக்கு உயிர்தந்த வழிபாடாகும். தொண்டை மண்டலத்தில் திரௌபதி எப்போது அம்மன் ஆனால்? என்பது தெரியவில்லை. எனினும் பல்லவர் காலத்தில் (7-ஆம் நூற்றாண்டு) காஞ்சிபுரம் காமாட்சியும், மதுரை மீனாட்சியும் சமணர்கட்கு எதிராக எழுந்த இந்து இயக்கத்தில் இந்து தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. பின்னாளில் காவல்பெண் தெய்வம் திரௌபதி அம்மனாகி இருக்கலாம்.
       தாய் தெய்வங்களுக்குரிய கோயில்களில் கரகம், கணியன் ஆட்டம் என்பன நடந்துள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆடல் வடிவத்தில் ஒரு நாடக வடிவம் இருந்து வந்துள்ளது. நாயக்கர் ஆட்சியில் யஷகானம், கர்நாடக பூத ஆட்டம், பாகவதமேளா என்பன தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகின. இவை அனைத்தையும் உள்வாங்கி திரௌபதி அம்மன் கோயில் ஒரு சடங்கு நாடகமாகத் தெருக்கூத்து உருவானது.

திரௌபதி அம்மன் திருவிழாவும் தெருக்கூத்தும்
       திரௌபதி அம்மன் திருவிழா தொண்டை மண்டலத்தில் குறைந்தபட்சம் 20 நாள்களாவது நடைபெறும். 20 நாள்களும் பாரத பிரசங்கியார் பாரத கதையை படிப்பார். இது பாரத விழா என்றும் அழைக்கப்படும். ஊரிலுள்ள சகல சமூக சாதி இன மக்களும் இணைந்து செயல்படுவர். எனினும் திரௌபதி அம்மன் கோயில்களின் உரிமை நிர்வாகம் என்பன பெரும்பான்மை சாதி இன மக்களிடமே இருந்தது அவர்கள் விவசாயிகளாக இருப்பர்.
       10-ஆம் பார சடங்கில் திரௌபதி வில் வளைப்புடன் கூத்து ஆரம்பமாகும். திரௌபதி அர்ஜுனனை திருமணம் செய்தல் சடங்கு முறையில் கோயிலில் நடைபெறும். ஏனைய பகுதிகள் தெருக்கூத்து குழுவால் நடித்து காண்பிக்கப்படும்.
       13-ஆம் நாள் அர்ச்சுனன் தபசு நடக்கும். மேடையில் விடியவிடியக் கூத்து நடந்து காலையில் கோயில் முன்னால் நடப்பட்ட மரத்தின் மீது அர்ச்சுனன் ஏறித்தவம் செய்வார். அர்ச்சுனன் தவம் செய்ய ஏறும் மரத்தை குழந்தை பேறு அற்ற பெண்கள் முழுகிக் குளித்துவிட்டுச் சுற்றி நிற்பர். அர்ச்சுனன் மர உச்சியில் நின்று சிவனை நினைத்துப் பாடி வில்வ இலைகளையும், பழங்களையும் கீழே சிவனை நினைத்து வீசுவார். அவற்றை இப்பெண்கள் பக்தி சிரத்தையுடன் முந்தானையில் தாங்குவர். அருச்சுனன் கீழிறங்கி வந்து சிவனை சந்தித்து மல்யுத்தம் புரிந்து, உண்மை உணர்ந்து பாசுபதாஸ்திரம் பெறும் வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.
       14-ஆம் நாள் கீசக வதமும், 15-ஆம் நாள் வீராடபர்வமும் நடைபெறும். 16-ஆம் நாள் அரவான் களப்பலி நடைபெறும். இதில் அரவான் சிலையொன்று கோயிலுக்கு முன்னார் செய்து வைக்கப்படும். நாடகம் இரவில் மேடையில் முடிந்ததும் காலையில் அரவான் களப்பலி சடங்காகக் கோயில் முன்றலில் நடைபெறும்.
       17-ஆம் நாள் கர்ண மோட்சம் தெருக்கூத்து நடைபெறும் 18-ஆம் நாள் துரியோதனன் வதம் இடம்பெறும். இது “படுகளம்“ என அழைக்கப்படும்ஃ 70-80 நீளமான துரியோதனின் சிலை படுக்கை நிலையில் கோயில் முன்னாள் செய்து வைக்கப்படும். காலையில் பிரசங்கியார் 18-ஆம் போரை வருணிக்க துரியோதனனுக்கும் வீமனுக்கும் கூத்து கலைஞர்கள் கோயில் முன்றலில் வசனம் பேசிப் போர் புரிவர். போரில் துரியோதனன் சிலையின் தொடையில் வீமன் அடிக்க அதில் வரும் ரத்தத்தை அனைவரும் தொட்டு எடுப்பர். (அச்சமயம் திரௌபதி சிலையும் அங்கிருக்கும் திரௌபதி துரியோதனின் இரத்தம் தலை தடவிக் கூந்தல் முடிந்ததை மக்கள் மீளச் செய்வர்)
       19-ஆம் நாள் தீ மிதித்தல் நடைபெறும். கோயில் முன் தீக்குழி பரப்பி திரௌபதி அம்மனின் சிலையுடன் 5 காப்புகாரரும் தீப்பாய்வர். மக்களும் இதில் கலந்து கொள்வர். 20-ம் நாள் தருமர் பட்டாபிஷேகத்துடன் பாரத விழா முடிவடையும்.
       இவ்வகையில் 17-ஆம் நூற்றாண்டில் தெருக்கூத்து ஓர் சடங்கு நாடகமாக ஆக இருந்துள்ளது. இக்கூத்து மேடையிலும், மேடைக்கு வெளியேயும் நடைபெற்றுள்ளது. திரௌபதி வணக்கம் தமிழ்நாட்டில் வந்தமைக்கும் வீரர் வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டு. சாளுக்கியரின் படை எடுப்பினின்று தற்காத்துக்கொள்ள வீர மக்களை திரட்ட பல்லவ மன்னர்கள் திரௌபதி வணக்கத்தை தொண்டை மண்டலத்தில் ஏற்படுத்தினர் என்பது ஒரு சாரார் வாதம்.
       தொண்டை மண்டலப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் இச்சடங்கு முறைகள் பிரதேச வேறுபாடுகளைக் கொண்டுள்ளன என சில ஆராய்ச்சியாளர்கள் கண்ட முடிபாகும். தொண்டை மண்டலத்திலுள்ள செஞ்சியில் இச்சடங்கு முறைகள் ஆரம்பமாகி அதுவே மற்ற இடங்களுக்கும் பரவியிருக்கலாம் என்பது ஒரு சிலர் கருத்தாக இருக்கிறது.
       இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் இந்து மக்கள் அனைவரையும் இணைத்து அவர்கட்கு எதிராக போரிடவைக்கும் இந்து மன்னர்களிடமிருந்தது. ஆரம்பத்தில் திரௌபதி அம்மன் சடங்காக இருந்த தெருக்கூத்து பின்னாளில் சடங்கு நடைபெறாத காலங்களில் ஊர்மன்றங்களில் பொழுது போக்கிற்காக ஆடும் கூத்தாக மாற்றம் பெற்றது.

முடிவுரை
       இந்திய கலை வடிவங்களில் மிகத்தொன்மையானதும் மதிப்புமிக்கதுமான ”தெருக்கூத்து” அருகிக்கொண்டே வருகிறது. நாட்டுப்புற நிகழ்கலைகளின் உன்னத வடிவமாக நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து தமிழகத்துப் பாரம்பரியக் கலைகளில் முதன்மையானது மட்டுமன்றி முக்கியமானதும் கூட. ஆடல், பாடல், உணர்ச்சி பொங்கும் வசனங்களுடன் அமையப்பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட அடவுகளாலும் காட்சி படிவங்களாலும் உடல் மொழியாக வெளிப்படுத்தப்பட்டு இக்கலை வடிவம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்த காலகட்டம் முடிவடைந்து விட்டதோ என்ற எண்ணத் தோன்றுகிறது.
       கேரளாவின் ”கதகளி” அவர்கள் எவ்வாறு உலகளாவிய ”தொன்மைகலைச் சான்றாக” முன்னிறுத்தப்படுகின்றதோ அதுபோல் தமிழர்களின் ”தொன்மைகலைச் சான்றாக” ”தெருக்கூத்து” இடம்பெறச் செய்யவேண்டும்.

‘ நன்றி ‘


உதவிய நூல்கள்
1.   மாற்று நாடகங்கள் – பேரா.பார்த்தீபராஜா
2.   மாபாரத கூத்துகள் – கவிஞர் முகிலன்

       

Sunday 27 September 2015

கணினியில் தமிழ் வளர்ச்சி



மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015
கணினியில் தமிழ் வளர்ச்சி
வகை : 1
தலைப்பு : இணையம் செலுத்தும் கணினி தமிழ்
முன்னுரை
       கல்வெட்டுகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் கணிப்பொறிகளில் எழுதப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கல்லிலிருந்து ஓலைக்குத்தாவி, அங்கிருந்து காகிதங்களுக்கு தாவிய தமிழ் இப்போது கணினிக்குள் நுழைந்திருப்பது தமிழ் வளர்ச்சியின் அடுத்த நிலையாகும். கணினி  வருகையால் ‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு‘ எனும் முதுமொழி மறைந்து ‘கற்றது கடுகளவு கல்லாதது கையளவு‘ எனும் புதுமொழியாக உருவெடுத்துள்ளது. இணையத்தின் வழிவகையடகக் கணினியால் தமிழரின் இணைப்பை இணைத்துவிடுகிறது.
              ‘வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
              விரல்கள் பத்தும் மூலதனம்‘ எனும்
       தாராபாரதியின் தாரக மந்திரத்தைக் கொண்டு பார்க்கும்போது அறிஞர், வல்லுநர், ஆர்வலர் போன்றோரின் உழைப்பினால் உதிர்ந்த் பூக்களாய், சிப்பிக்குள் முத்தாய் கிடைக்கும் மூலதனமே நம் கணினித் தமிழாகும். இத்தமிழின் தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வலிமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை போன்ற உண்மை நிலையினை வெளிப்படுத்துவதற்கும் இலக்கிய இலக்கண வளம், மொழியியல் வளம் பெருகுவதற்கும் கருவி என்னும் சாதனங்கள் நம் தேவைகளுக்கேற்ப பெரும் உதவி புரிந்துள்ளன. மொழியே அனைத்து செயல்பாடுகளுக்கும் பரிமாற்றம் செய்யும் பெட்டகம். மனிதனால் சாதிக்க முடியாத சாதனைகளையும் மனித மூளைக்கொண்டு கணினியில் சாதிக்க முடிகிறது. ஏனெனில் தோண்ட தோண்ட வற்றாத ஊற்றாகவும் என்றுமே ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிற நதியாகவும் மனித வாழ்க்கையின் மகத்துவத்தை அழியாமல் காத்துக்கொள்ளும் பெட்டகமாக கணினியின் பயன்பாடு இயங்கி வருகின்றது,

கணினி தமிழ் வளர்ச்சி:-
       25 ஆண்டுகளுக்கு முன்பு கணினியில் தமிழ் எழுத்துகளைத் தட்டச்சு செய்ய முடியாத நிலையிலிருந்து ரோமன் எழுத்துகளில்தான் தமிழை எழுத முடிந்தது. தமிழ் எழுத்துகளில் மாற்றிக்கொள்ளக்கூடிய வளர்ச்சியும் தமிழ் எழுத்துக்களையே நேரடியாக தட்டச்சு செய்து கொள்ளக்கூடிய வளர்ச்சியை எட்டியது.
       தற்போது உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகு தரமான யூனிகோடு (Unicode) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது. இந்த யூனிகோடு முறை மூலம் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும் பெறவும் மின்னஞ்சல்களை அனுப்பவும் எளிதாக முடியும். யூனிகோடு முறை தமிழ் இணையப் பயன்பாட்டில் ஒரு மைல்கல். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழிலேயே கணினி பயன்பாடு அமைவது மிகச் சிறந்த மாற்றத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
       இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்று வருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். தகவல் தொடர்பான ஒரு நீட்சியாகத்தான் கணினியும் இணையமும் நமக்கு நம் பணிகளை எளிதாக்கியது. இன்று எந்த ஒரு துறையும் இணையச் செயல்பாடு இன்றி இயங்குவதில்லை.
       ‘ஒரு சமூதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலிவடையும்‘ என்னும் கருத்திற்கேற்ப இணையத்தில் தமிழை பயன்பாட்டு மொழியாக்குவது சாலச் சிறந்தது.
       தமிழ் எழுத்துகளை முதன் முதலில் கணிப்பொறியில் உள்ளிட்டவர்கள் கனடாவில் வாழும் இதயம் சகோதரர்கள் ஆவர். முதலில் மின்னஞ்சல் வழி தமிழ் மொழியானது இணையத்தில் உலா வந்தது. பின் சிறிது சிறிதாக தமிழ் இணைய தளங்கள் தமிழில் உருவாகின. இதன் வழி இணையத்தில் பல அரிய தகவல்கள், செய்திகள், இலக்கியங்கள், படைப்புகள் போன்றவை தம்ழில் காணப்படுகின்றன. தமிழ் தகவல்கள் விக்கிபீடியா, வலைப்பக்கங்கள், தமிழ் திரட்டிகள், மின் நூலகங்கள், இணைய வானொலிகள், சமூக வலைதளங்கள் போன்ற தளங்களின் வழி காணக்கிடைக்கின்றன.

மொழியியல் பயன்பாட்டில் கணினித் தமிழ்:-
       கணினியால் தமிழை உலகெங்கும் பரவச் செய்ய பல வகைகளில் மொழியியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தமிழ் மொழியியலின் மூலம் எண்ணற்ற மென் பொருள்களை உருவாக்கி வருகின்றனர். உதாரணமாக தரவுகளைக் சேகரித்து அத்தரவுகளின் மூலம் மொழிப் பெயர்ப்பு செய்யவும், இலக்கணத்தை உட்புகுத்தி எழுத்து, சொல், பொருள், வாக்கியம் போன்றவை கண்டறிவதற்கும் கணினித் தமிழ் ஆய்வுகள் ஆராய்ந்து வருகின்றனர். தொன்மைக் கால ஆவணங்களைக் கணினியின் துணைக்கொண்டு முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் மொழி ஆய்வு வளர்ச்சியில் சொல்லுருபு பிழைத்திருத்தி, வாக்கிய அமைப்பு பிழைத்திருத்தி, இலக்கணப்பிழைத்திருத்தி போன்ற மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. கணினிப் பயன்பாட்டிற்கு அச்சானியாக விளங்குவது மொழி ஆகும். மக்கள் பேசும் மொழிக்கும் கணினித் தெரிந்து கொள்ளும் மொழிக்கும் வேறுபாடு உண்டு. கணினிக்கு தெரிந்த மொழி பூஜ்யம், ஒன்று இந்த இரண்டைத் தவிர வேறொன்றும் அதற்கு தெரியாது.
       எந்த ஒரு மொழியில் எழுத்துக்கள் குறைந்துள்ளதோ அம்மொழி கணினியில் முதன்மை இடமாக வகிக்கின்றது. அவ்வகையில் ஆங்கில மொழி உலகத்தில் முதன்மையாக காணப்படுகின்றது. ஆங்கில எழுத்துகளில் சிறிய எழுத்துக்கள் 26, பெரிய எழுத்துக்கள் 26, எண்கள் 0 முதல் 9 வரை உள்ள 10 எழுத்துக்கள், குறியீடுகள் 30 எழுத்துக்கள் ஆக மொத்தம் 102 எழுத்துக்களை கொண்டுள்ளதால் கணினிக்கு நிரல் நிரை படுத்துவதற்கு உகந்ததாக அமைகிறது.
       அடுத்தபடியாக தமிழ் எழுத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு தேவைப்படுகிறது. ஆங்கில எழுத்துகளைவிட குறைவானதாக நம் தமிழ் மொழி இருக்கிறது. ஆனாலும் நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர். அதனால்தான் தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம் பின்தங்கியே கிடக்கிறோம். கணினி பயன்பாட்டிற்கு தமிழ் எழுத்தான உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, ஆய்த எழுத்து 1 எண்கள் 10 எழுத்துகள் குறியீடு 30 ஆக மொத்தம் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு நிரல்நிரை செய்வதற்குத் தேவைப்படுகிறது. இதை கணினியில் உட்புகுத்தி ஆங்கிலத்தைவிட தமிழ் முன்னோடியாக திகழ்வதற்கும் தமிழ் கணினிப் பயன்பாட்டிற்கு மொழியியலை ஆய்வதற்கும் முயற்சி செய்து கன்னித் தமிழை வளர்த்தெடுப்பதற்கு ஒரு பெரும் மைல்கல்லாக அமையும்.

வலைப்பதிவுகளில் தமிழ்:-
       ஆங்கிலத்திலேயே தகவல்களை வலைப்பதிவுகளில் வழங்கும் முறை முன்பிருந்தது. அயல்நாடு தமிழர்களின் முயற்சியில் தமிழில் தகவல்களைப் பெறும் வசதி வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் இத்தகைய எளிமையான முறையை அறிமுகப்படுத்த http:/tamilblogspot.com  என்ற இணையம் மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது. அதில் சில இடையூறுகள் இருந்தன.
       தமிழ்மணம் என்ற தளம் நல்ல திரட்டியாக செயல்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் கணிமை, டெக்னோரட்டி, மாற்று சங்கமம், தமிழீழத்திரட்டி போன்ற பல திரட்டிகள் பல பதிவுகளைத் தமிழுலகிற்குத் தந்தது. திரட்டிகள் உலகெங்கும் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டி தரும் நோக்கில் செயல்படுகின்றன. இத்தகைய திரட்டிகளை தக்கவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையில்லாத செய்திகளை இப்பதிவில் இடுவது தேவையற்றது. இத்தகைய வலைப்பதிவுகளால் தமிழின் வளர்ச்சி உலகறியும் செய்யும்படி உள்ளது.

இன்றைய சமூக வலைதளம்:-
       தமிழை இன்றைய வலைதளங்களின் வழியாக எதை வேண்டுமானாலும் உடனுக்குடன் அனுப்ப முடிகிறது. உதாரணமாக பேஸ்புக், டுவிட்டர், டெலிகிராம். ஹைக் போன்ற தளங்களின் வழியாக செய்திகளையும் படங்களையும் அனுப்ப முடிகிறது. நாம் அத்தகைய தளத்தில் செய்தியை நேரடியாகவும் தமிழில் அனுப்பலாம் அல்லது வேற்று மொழிகளில் தட்டச்சு செய்தால் தமிழில் தானாகவே மொழிமாறி அனுப்பும் வசதியும் இத்தகைய வலைதளங்களில் வந்துவிட்டன. இதனால் தங்களுடைய படைப்புகளை பலர் வாசிப்பதும் அதனை விமர்சனம் செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கிறது. அறிமுகமில்லாத நபர்கள் கூட ஒரு மொழியைப் பற்றியும் அதன் சிறப்பினைப் பற்றியும் அறிய இத்தகைய சமூக வலைதளங்கள் உதவுகின்றன.

முடிவுரை:-
              யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
              இனிதாவ தெங்கும் காணோம்.
       என்பதனை இணைய வாயிலாக தமிழர்களின் இணைப்பைக் காண முடிகிறது. மேலும்
              சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
              தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

       பட்டி தொட்டிகளிலெல்லாம் தமிழின் மனம் கணினி வழி உலகமெங்கும் வீசப்படவேண்டும்.
              பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
              தமிழி மொழியிற் பெயர்த்தல் வேண்டும்,
       பிற மொழி பெயர்ப்புகள் கணினி வழிக் கண்டுணர முடிகிறது.
கணினியில் தமிழ் பயன்பாடு வந்திருந்தாலும் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியவில்லை. இதற்கு தமிழர்களாகிய நாம்தான் காரணம். ஒருவரை ஒருவர் சந்தித்தாலும் தமிழ் பேசுவதைத் தவிர்க்கிறோம். ஆங்கில மோகம் நம்மை ஆட்கொண்டுவிட்டது. கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறைந்தபட்சம் தமிழர்களை இணைக்கவாவது பயன்படும். இந்த முயற்சி தொடரவேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த முயற்சியை அறிமுகம் செய்தால். கணினி தமிழ் வளரும் தமிழின் தொன்மைச் சிறப்பு, தமிழ்ப் பொறியாளர்களின் ஆர்வம் தமிழி கணினிக்கான மென்பொருள்களின் பரவல் மற்றும் சந்தைப் படுத்துதல் அத்துடன் உலகளாவிய தமிழர்களின் தமிழ்ப்பற்று ஆகியவை கணினிப் பயன்பாட்டின் வழி தமிழின் வளர்ச்சியைத் தடுக்க இயலாத முக்கியக் காரணிகளாக அமைந்து தமிழின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

‘ நன்றி ‘

பெண்கள் முன்னேற்றம் கட்டுரை


பதிவரின் பெயர்
:
கி.லோகநாதன் M.A.M.A.B.Ed.,M.Phil. Phd.
அகவை
:
46
ஒளிப்படம்
:

வலைப்பதிவு

teacherloga.blogspot.in
மின்னஞ்சல்
:
அலைபேசி எண்
:
9789594178

உறுதிமொழி

1.   படைப்பு தமது சொந்தப்படைப்பு என உறுதி கூறுகிறேன்.
2.   வலைப்பதிவர் திருவிழா 2015 தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015” க்காகவே எழுதப்பட்டது.
3.   இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்னும் உறுதி கூறுகிறேன்.


தங்கள் உண்மையுள்ள,
    கி.லோகநாதன்

இடம் : திமிரி
நாள் : 25.09.2015


           


மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015
பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி
வகை : 3
தலைப்பு : சிறைகளுக்கும் விடுதலை!
முன்னுரை
       பெண்னைப் பற்றி பேசுவதும் எழுவதும் இன்று பரவலாகி வருகின்றது. ஆனால் நடைமுறையில் செயல்பாட்டில் பெரிய இடைவெளி. பெண் விடுதலைப்பற்றி பேசுபவர்களும் எழுதுபவர்களும் கூட சுயவாழ்வில் அதனைக் கடைப்பிடிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள்,

       பெண்ணைப் பற்றிப் பேசுவதும் எழுவதும் பெண்கள் முன்னேற்றத்திற்கு, பெண் விடுதலைக்கு என்ற நிலையிலே கவனிக்கப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல! பெண்ணைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் ‘சமூக விடுதலைக்கானவை.’ சமூக விடுதலையும் பெண் விடுதலையும் வேறு வேறானவை அல்ல! இதனைத்தான் மகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும் நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறார்கள். வானத்தை ‘ஆகாஷ்வாணி’ என்றும் பூமியை ‘பூமாதேவி’ என்றும் தேசத்தை ‘பாரத மாதா’ என்றும் கரைபுரண்டு ஓடும் நதிகளை ‘கங்கை, யமுனை, காவிரி, கோதாவரி’ என்றும், கல்விக் கடவுளை ‘சரஸ்வதி’ என்றும் செல்வத்திறகு ‘லஷ்மி’ என்றும் எல்லைகளை காக்கும் தெய்வங்களை ‘காளி, சக்தி, முத்தாளம்மன்’ என்று பெண் தெய்வங்களாகவே சித்தரித்துள்ளோம். அனைத்துச் சமூக குழுக்களும் தங்களுடைய குல தெய்வங்களாகப் பெண் தெய்வங்களையே வழிபடுகின்றன. நாம்  பேசுகின்ற மொழியினையே தாய்மொழி என்றுதான் சொல்கிறோம்.
       ஆனால் நடைமுறை வாழ்வில், சமூக யதார்த்தத்தில் பெண்களின் நிலைப்பாடு என்ன?
       இந்த முரண்பாடுகளுக்கு என்ன காரணம்? என்பதை இக்கட்டுரையில் காண்போம்,

வரலாற்று நோக்கில் பெண்கள்:-
       இந்த உலகில் உள்ள உயிர்களை எண்ணிச் சொல்ல முடியாது. அவற்றில் மனிதனும் ஓர் உயிர். மனிதன் என்னும் உயிர் தோன்றிய காலத்தில் அவனுக்கு குடும்பம் இல்லை, மனைவி இல்லை. பேசுவதற்கு மொழிகூட இல்லை. ஒவ்வொரு உயிருக்கும் அவசியமான இரண்டு காரியங்கள் இருந்தன. முதல் காரியம் சாப்பிடுவது; இரண்டாவது இனப்பெருக்கம் செய்தது. மனிதர்கள் கணவன், மனைவி, குழந்தைகள் என்று வாழத்தொடங்கினான். இதனை ‘கூட்டம்‘ அல்லது ‘குழு‘ என்பதுதான். குடும்பம் தோன்றுவதற்கு முன்னதான சமுக அமைப்பு ஆகும். சில குழுக்கள் பெண்களை மையமாகக் கொண்டிருந்தன. இதுதான் ‘குடும்பம்‘ என்ற அமைப்பின் பழமையான வடிவம். தாய்வழிச் சமூகத்தில் பிறக்கும் குழந்தைகளின் அம்மா யார் என்று சொல்லாம். அப்பாவைச் சொல்ல முடியாது. அந்தக்குழுவில் இருக்கும் யாராவது ஒரு ஆண் தந்தையாக இருக்கக்கூடும். பிற்பாடு ‘தனி உடைமை‘ என்ற கருத்தாக்கம் குழுவினரிடையே தோன்றிய பிறகு ஆண்மகனை பிரதானமாகக் கொண்ட சமூக அமைப்புத் தோன்றியது,
      
பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமான கதை:-
Ø  பெண்கள் வேட்டையிலிருந்து விலக்கப்பட்டார்கள். பெண்னுக்கு வெளி உலகத் தொடர்பு அறுத்து போனது. பெண்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே உகந்தவள் என உருவானது.
Ø  பெண் அடிமை ஆவதற்குப் போடப்பட்ட முதல் அடி நீர், நிலம் கால்நடைகள் போன்ற இயற்கை வளங்கள் ஆண்களின் வசமானது. இயற்கை வளங்கள் ஆணின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பெண் இப்போது ஆணுக்கு சொந்தமான பொருள்களில் ஒன்றாகி போனாள் உடைமை ஆகிப் போனாள்.
Ø  ஒருவனுக்கு ஒருத்தி என்ற புதிய குடும்ப முறை உருவானது. இதுதான் ஆண்வழிச் சமூகத்தின் ஆரம்பம்.
காலங்கள் உருண்டன. ஆணை அடிப்படையாகக் கொண்ட ‘தந்தை வழிச் சமூகம்‘ தலை எடுத்தது.
Ø  சமூக உற்பத்தில் பெண் அனுமதிக்கப்படவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தவிர்க்க முடியாத விதி ஆனது. கற்பு நெறிக்கும் சமயம் சாயம் பூசினார்கள், சமயம் கடுமையாக கட்டுப்பாடுகளைப் பெண்களின் மீது திணித்தது. சமயம் என்பது ஆண்களின் கைப்பாவை ஆனது.
Ø  சமயத்தின் பெயரால் ஆண்கள் புதுப்புது விதிமுறைகளை உருவாக்கினர். அவை பெண்களுக்கு எதிராக அமைந்தன. இந்த விதிகளை வலியுறுத்த இலக்கியங்களை உருவாக்கினர்.
Ø  மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டவள். அவளுக்கு கற்பு உயிரைவிடப் பெரியது. கணவனுக்காக மனைவி தியாகங்கள் செய்ய கடமைப்பட்டவள்.
Ø  கணவனை இழந்த பெண் விதவையாகவே காலம் தள்ள வேண்டும். விதவைகள் மீண்டும் திருமணம் செய்யக்கூடாது.

இலக்கியத்தில் பெண்களின் நிலை:-
       காலத்தின் கண்ணாடி இலக்கியம், ஒரு காலகட்டத்தில் நிகழும் சமூக வாழ்க்கையின் செயல்கள் யாவும் இலக்கியங்களில் பதிவு செய்யப்படுகின்றது. இந்தி மொழி இதிகாசங்களிலும், தழிழ் இலக்கியங்களிலும் ஆண்களின் அடக்குமுறைக்கு ஆளான பெண்கள், ஆண்களால் இழிவுபடுத்தப்பட்ட பெண்கள், இப்படி இப்படிதான் பெண் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு ஆளான பெண்கள் என்று நம் இலக்கியங்கள் பல சான்றுகள் கூறுகின்றன.
       இலக்கியங்களையும் இதிகாசங்களையும் புரட்டும்போது இரண்டு அம்சங்களை நாம் கூர்ந்து கவனிக்கப்படவேண்டும்.
       1. பெண்ணின் அன்றைய நிலை
       2. பெண்ணின் எதிர்ப்புக் குரல்

1. பெண்ணின் அன்றைய நிலை:-
       வாய்மொழி இலக்கியமாகப் பழமொழிகள் கருதப்படுகின்றன. அவற்றில் பெண்ணின் நிலை….
       ‘பெண்பிள்ளை சிரிச்சா போச்சு
       புகையிலை விரிச்சா போச்சு.‘
       ‘இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
       சந்திரன் கெட்டதும் பெண்ணாலே‘.
       ‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே‘
       ‘தையற் சொல் கேளேல்‘
       ‘உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு‘
       ‘கல்லானாலும் கணவன், புல்லாணாலும் புருஷன்‘

இப்பழமொழிகள் சொல்லும் செய்திகள்:
v  பெண் இயற்கையாகவே அறிவற்றவள்
v  பெண்கள் உரிமையில்லை
v  கணவனின் உடைமைப் பொருள்
v  பெண்களுக்கு சொத்து உரிமை இல்லை.

தொல்காப்பியத்தில் பெண்கள்:-
       தமிழகத்தில் எழுத்து வடிவில் கிடைத்துள்ள தொன்மையான நூல் தொல்காப்பியம். ஆண்களைப் பற்றி குறிப்பிடும் போது பெருமையும் உள்ள உறுதியும் ஆடவனுக்கு சொந்தம் என்கிறது. பெண் என்று வரும்போது அச்சம். நாணம், மடம், பயிர்ப்பு என்ற நான்கு குணத்தினை கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறது.
       பொருள் தேடுபவன் ஆண், வீட்டு வேலைகளைச் செய்பவள் பெண். ஆண்கள் கடல் கடந்து பொருள் தேடச் செல்லலாம். அப்போது பெண்களை அழைத்துச் செல்லக்கூடாது,
       ‘முந்நீர் வழக்கம் மகடுவோ இல்லை‘ (தொல், பொருள்)
தொல்காப்பியம் பல்வேறு பிரிவுகளுள் ஒன்றாக பரத்தையற் பிரிவு, ‘காதற் பரத்தை‘, இற்பரத்தை, சேரிப்பரத்தை, காமக்கிழத்தி போன்ற பல்வேறு பெயர்களில் சென்று திரும்பும் கணவனைக் கண்டிக்கவோ திருத்தவோ பெண்களுக்கு உரிமை இல்லை.


சங்க இலக்கியத்தில் பெண்கள்:-
ª  சங்ககாலத்து இலக்கியங்கள் பெண்களைப் பலவீனமானவர்களாகவே காட்டுகின்றன.
ª  பெண் பெரும்பாலும் அவளுடைய உறுப்பு அழகையும், அவள் அணியும் ஆடை, அணிகலனையும் கொண்டே அழைக்கப்பட்டாள்.
ª  பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை, தன் வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்ளும் உரிமை ஆகியன இருந்தன என்பதைனை அறியமுடியாது.
ª  பெண்கள் தங்கள் கணவரைத் தாமே தேர்ந்தெடுக்கும் நிலை பெற்றோர்களின் முயற்சியால் கணவரைத் தேர்ந்தெடுக்கும் நிலை இருந்துள்ளன.
ª  உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கம் வசதிபடைத்த குடியினரிடையே நிலவி உள்ளது.

அற இலக்கியங்களில் பெண்கள்:-
       சங்க காலத்தை ஒட்டி எழுந்த நூல் திருக்குறள். திருக்குறளை அறம் கூறும் நூல் என்பர். இந்நூல் பெண்ணைப் பற்றி..
·         பெண்னை ‘வாழ்க்கைத்துணை‘ என்று உயர்வாக கருதுகிறது.
·         பெண்ணுக்கு கற்பு இன்றியமையாதது.
·         கணவனைச் சார்ந்து வாழும் பெண் அவனை தெய்வமாகக் கருதி வணங்கவேண்டும்.
·         ஆண்கள் பிறருடைய மனைவியை நாடக் கூடாது.
·         திருவள்ளுவர் காலத்தில் பெண்கள் அரசியலிலோ பொது வாழ்விலோ பங்கு கொண்டதாக தெரியவில்லை.

காவிய, காப்பிய நோக்கில் பெண்கள்:-
       தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் வெளிவந்த காலத்திலும் பெண்களின் நிலை வருந்தும்படியாகவே இருந்தது.
v  இராமாயணத்தில் தசரதனுடைய அந்தப்புரத்தில் அறுபதினாயிரம் பெண்கள் இருந்தனர். இதில் அரசியல் ஒப்புதல் பெற்றவர் மூவர்.
v  இராவணனோ மனைவியர் எண்ணிக்கையில் தசரதனையும் விஞ்சியவன்.
v  அசோகவனத்தை சுட்டெரிக்கும் ஆற்றல் பெற்றவளாக சீதை இருந்தாலும் இராமனுக்கு மனைவி என்ற நிலையில் அடங்கி இருப்பதே சீதைக்கு அழகு என்று காட்டுகிறது இராமாயணம்.
v  பாரதம் பெண்ணடிமைத்தனத்தை மிகுந்து காட்டுகிறது. கணவன் நினைத்தால் மனைவியை சூதாட்டத்தில் பணயம் வைக்கலாம் என்ற கருத்து நிலவியது.
v  சீவகசிந்தாமணி எட்டுபெண்களை மணந்த சீவக மன்னனின் வெற்றிச் சிறப்பைக் காட்டுகிறது.
v  பெரிய புராணத்தில் மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார் அவர்களை அருள் திறமும் கல்வியாற்றலும் கொண்டவராக காட்டப்படுகிறது.

பெண்களின் எதிர்ப்புக் குரல்:-
       ஆண் ஆதிக்கச் சமூகத்தின் போக்கினை எதிர்த்து எழுந்த முதலாவது பெண் சிலப்பதிகாரத்துக் ‘கண்ணகி‘யுடையதுதான். இக்காப்பியத்தில் மேலும்
·         கணிகையர் குல வாழ்வில் இருந்து விலகித் துறவு பூணும் மாதவி
·         வாழ்வின் போலித்தன்மையும், நிலையைமையும் கண்டு துறவியாகவே திரியும் ‘கவுந்தடியடிகள்‘,
‘உணர்வும் அறிவும் கொண்ட சமூக உயிர்தான் பெண் என்பவள்‘ என்ற தமிழ் இலக்கியத்தில் முதன் முறையாக வெளிப்படுத்திய காப்பியம் சிலப்பதிகாரம்தான்.
       வெள்ளிவீதியார், நக்கண்ணையார், ஔவையார் என்ற பெண் கவிஞர்களை புறநானூறு காட்டுகிறது. குறிப்பாக ஔவையார் கவிஞராக மட்டும் நின்று விடாமல் இரண்டு அரசர்கள் பகைகொண்டு ஒருவரோடு ஒருவர் மோதி மக்கள் அழியாதவாறு ‘சமாதானத்தூதுவராக‘ சென்று வெற்றி பெற்று காட்டியிருக்கிறார்.

20ஆம் நூற்றாண்டு இலக்கியங்களில். . .
       20ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் பெண்ணைப் புதிய பார்வையில் நோக்குவதைக் காண முடிகிறது. ஆங்கிலேயர்கள் வருகை. ஆங்கிலக்கல்வி, வெளித் தொடர்புகள், புதிய சிந்தனைகளின் எழுச்சி காரணமாக புதிய மனப்போக்கு தோன்றியது.
       இந்தக்காலத்தில் பெண்களின் விடுதலைக்காக, எழுத்தில் செயலில் குரல் கொடுத்தவர்களுள் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பாரதியார், திரு.வி.க., பெரியார், பாரதிதாசன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மாயூரம் வேதநாயகம்பிள்ளை பெண் கல்வி, பெண்மதிமாலை, பெண்மானம் ஆகிய நூல்களை படைத்தவர். பாரதியார் பெண்விடுதலை, பெண்விடுதலைக்கும்பி, பெண்மை, சுயசரிதை போன்ற கவிதைகளில் பெண்ணுரிமைக் குரல் கொடுத்தவர்.
       “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
              பேணி வளர்த்திடும் ஈசன். . .
       பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
              பேதமையற்றிடுங் காணீர்?                    - பாரதி

       பெண்கட்கு கல்வி வேண்டும்
       குடித்தனம் பேணுதற்கே!
       பெண்கட்கு கல்வி வேண்டும்
       மக்களைப் பேணுதற்கே!
       பெண்கட்கு கல்வி வேண்டும்
       கல்வியைப் பேணுதற்கே!       - பாரதிதாசன்

       தந்தை பெரியார் 1931ல் விருதுநகரில் நடந்த மாநாட்டில் பெண்கள் விடுதலைக்கான வழிவகைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி கருத்து பிரச்சாரங்கள் செய்தார். பெண்கள் காவல் துறையிலும் படையிலும் பணிபுரிய வாய்ப்பு அளிக்கவேண்டும். அரசு அலுவல்களில் 50% பெண்களுக்கென ஒதுக்கப்பட வேண்டும் என்பன போனற் புரட்சிகரமான கொள்கைகளை வெளியிட்டார். பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலில் பெண்களின் விடுதலைக்கு பல்வேறு கருத்துக்களை புரட்சிகரமாக எடுத்துரைக்கிறார்.

முடிவுரை:-
       வேட்டைச் சமூதாயத்தில் தலைமையிடம் பெற்றிருந்த பெண், விவசாய சமூதாயத்தில் வீழ்ந்து இடைக்காலத்தில் அடிமையாகப்பட்டு பின் 20 ஆம் நூற்றாண்டில் உரிமைக்காகப் போராட எதிர்ப்புக் குரல்கள் பலமாக உதிக்கத் தொடங்கின. “யானைகளையே பிச்சை எடுக்கச் செய்யும் நாடு இது! தம் ஆற்றலை உணர்ந்தால் அவை ஒரு சிறு வாழைப்பழத்துக்காகத் தும்பிக்கையை ஏந்துமா?
       பெண்கள் யானைகள் பலசாலிகள். அவர்கள் தங்களை புரிந்துகொண்டால்…. இந்த அவலம் ஒழியும்“ என்றார் எழுத்தாளர் ஒருவர். பெண்கள் தங்களை புரிந்து கொள்ளவேண்டும். பெண்கள் எந்தவிதத்திலும் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் என்பதனை ஆண்கள் உணரவேண்டும். பெண்ணும் சேர்ந்ததுதான் சமூகம். இதுதான் இயற்கை அமைப்பு. பெண் விடுதலை என்பதும் பெண் சுதந்திரம் என்பதும் ஆண்களுக்கு எதிரானது அல்ல. சமூகத்தினை மீறின செயலும் இல்லை. உண்மையிலேயே பெண் விடுதலை என்பது சமூகத்தின் விடுதலையே! பெண் சுதந்திரம் என்பது சமூகத்தின் சுதந்திரமே! இந்த அடிப்படையை புரியாதவர்கள் குழம்பிப் போகிறார்கள் மற்றவர்களையும் குழப்புகிறார்கள். பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்ப்பது அன்று, பெண் விடுதலை பெண்ணியத்தின் நோக்கம் காலம் காலமாக அடிமைப்பட்டு வதைப்பட்டு வாழும் பெண்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டெடுப்பதுததான்“
       இதனை பெண் “கல்வி“ மூலம்தான் மீட்டெடுக்க முடியும். அப்போதுதான் அடிமைப்பட்டு கிடக்கும் பெண் எனும் ‘சிறைகளுக்கும் விடுதலை‘ என்பது சாத்தியமாகும்!


‘ நன்றி ‘