Thursday 7 July 2016

கல்வியாளர்கள் சங்கமம் – 2016
காரைக்குடி


ஆசிரியர்களால். . .  மாணவர்களுக்காக


என் வகுப்பறை. . . . .






 


கி.லோகநாதன், எம்.ஏ.,எம்.ஏ.,பி.எட்.,எம்.ஃபில்.,
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றி நடுநிலைப் பள்ளி
சென்னசமுத்திரம் / 632 506
திமிரி ஒன்றியம் (வே.மா.)

செல்பேசி : 9150312721 / 9789594178
E-Mail : logakrish69@gmail.com, teacherloga.blogspot.in



என் வகுப்பறை

       கல்வி சிறந்த தமிழ்நாட்டில் வரலாற்று புகழ்மிக்க வேலூர் மாவட்டத்தில் திமிரி ஒன்றியம், சென்னசமுத்திரம் நடுநிலைப்பள்ளி வரலாறு பட்டதாரி ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய ஒட்டு மொத்த பணிக்காலம் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் ஒவ்வொரு நாளும் வகுப்பறை என்பது செயல்படும் வகுப்பறையாக மாற்ற என்னால் ஆன சிறுசிறு முயற்சிகள் மேற்கொள்வதுண்டு.
       வரலாறு கடந்த கால நிகழ்வுகளை அவற்றுடன் தொடர்புடைய மனிதர், இடம், காலம் இவற்றுடன் தொகுத்தளிக்கிறது. எனவே, மனிதர், இடம், காலம் ஆகிய மூன்று கூறுகளும் வரலாற்றுக்கு மிகவும் முக்கியம். ஒரு நிகழ்வில் மூன்று கூறுகளும் ஒன்று இல்லை எனினும் அது வரலாறாகாது. எந்த வரலாற்றுக்கருத்தும்
Ø  நிகழ்வு என்ன?
Ø  நிகழ்த்தியவர் / நிகழ்வில் பங்குகொண்டவர் யார்? (மனிதர்)
Ø  எங்கு நிகழ்ந்தது? (இடம்)
Ø  எப்பொழுது நிகழ்ந்தது? (காலம்)
என்ற நான்கு வினாக்களுக்கும் விடைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை.
அப்படி வரலாற்று நிகழ்ந்து இடம் நபர் பற்றிய பாடம் 8 ஆம் வகுப்பில் ஐரோப்பியர்கள் வருகைக்குப்பிறகு ஆங்கிலேய பிரெஞ்சு ஆதிக்கப்போட்டியில் “இரண்டாம் கர்நாடகப் போர்“ என வரலாறு சொல்கின்ற பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த கர்நாடக நவாப் சந்தா சாஹிப்பை ஆங்கிலேய, இராபர்ட் கிளைவ் ஆற்காட்டை முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். முகம்மது அலியை ஆற்காட்டின் நவாப் ஆக்கினார். எனவே ராபர்ட் கிளைவ் “ஆற்கட்டு வீரர்“ என பெருமையோடு அழைக்கப்பட்டார், என பாடப்பொருள் இயம்பும்.
இப்பேர்பெற்ற ஆற்காட்டில் ஒரு பெரிய கேட் ஒன்று நிறுவி நாளைக்கு டெல்லிக்கு செல்வதற்கான வாயில் இதுதான் என்று பொருள்பட டெல்லிகேட் ஒன்றை கட்டமைத்தார். இவ்விடத்தை காண செல்லலாம் என 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூறினேன். அவர்களும் எப்போது செல்வோம் என்று மிகவும் ஆவலாக இருந்தனர். அந்நேரத்தில் சில வட்டார அளவில் (SSA) சில பயிற்சிகள் நடைபெற்றன போதுமான ஆசிரியர்கள் பள்ளியில் இல்லாத காரணத்தினால் ஒரு வாரம் தள்ளிபோனது.
மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் பயிலும் மாணவரின் பெற்றோர் ஒருவர் லோடு லாரி (207) வைத்திருக்கிறார். சார் நாம் அதில் போகலாம். என்னுடைய பெயரை அவரிடம் சொல்லி “சார் லாரி கேட்கிறார் ஆற்காட்டு  வரை செல்ல வேண்டும்“ என கூறுகின்றனர். (எங்கள் பள்ளியிலிருந்து ஆற்காடு 28 கி.மீ) அவரும் ஒப்புக்கொள்கிறார். எரிபொருள் தேவைக்கு மட்டும் (டீசல்) காசு கொடுத்தால் போதும் என்கிறார்.  பிறகு ஏதாவது கொடுங்கள் நாளை வருகிறேன் என சொல்லிவிட்டுச் சென்றார். பின் மறுநாள் லாரியில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (33 மாணவர்கள்) அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியருடன் சென்றோம். வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பார்த்ததில் மாணவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. மாணவர்கள் கி.பி.1752க்கு சென்றுவிட்டனர். சார் இங்கேதான் சந்தாசாஹிப் இருந்தானா? பிரெஞ்சுக்காரர்கள் எத்தனை பேர் இருந்தனர்? ஆங்கிலேயப் படைகள் எத்தனை பேர் இருந்தனர்? நவாப் என்றால் என்ன? அக்காலத்தில் “ஆற்காடு தலைநகராக விளங்கியதா? என அவரவர்க்கு தோன்றி கேள்விகள் மாணவர்களிடம் வந்தது? பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டனவா? இவ்விடம் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரிக்கப்படுகிறது என்ற தகவல்களையும் பெற்றனர்.
இப்படி களப்பயணமாக சென்ற நேரத்தில் AEEO எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அப்பொழுது அவர்கள் ஆசியர்களிடம்  அனுமதி இல்லாமல் களப்பயணம் செல்லக் கூடாது? என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன? என பல கேள்விகள் கேட்டுவிட்டு சென்றார். அன்று பிற்பகல் நாங்கள் பள்ளிக்கு வந்துவிட்டோம். அவர்கள் கேட்ட சில கேள்விகள் நியாயமானவைதான் என்றாலும் எங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.
தம் பாடத்தில் வரும் நிகழ்வுகளின் வரலாற்று இடத்தை மாணவர்கள் பார்த்தார்கள் என்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதா?  இல்லை கல்வி அலுவலர் இதுபோன்ற செயல்கள் வருங்காலங்களில் செய்யக்கூடாது. மாணவர்களை அழைத்துச் செல்வது என்பது என்னுடைய அனுமதியின்றி நடக்கக்கூடாது என்ற வேதனையை வெளிப்படுத்துவதா? என்று தெரியவில்லை, இருப்பினும் தலைமையாசிரியரின் ஒத்துழைப்பு முழு அளவில் இருந்தபடியால் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறி முடிந்தன. அதுவல்லாமல் மாணவர்களின் தீவிர முயற்சியும் அவர்களாகவே திட்டமிட்டு செய்த பயணம் என்பதால் கூடுதலாகவே தாம் இணைத்துக்கொள்ள ஏதுவாக அமைந்தது.
“ஒரு நிகழ்விலிருந்து நூறு படிப்பினைகளைக் கற்றுக்கொள்கிறவன் அறிவாளி, ஆனால் நூறு நிகழ்வுகளிலிருந்து ஒரு படிப்பினையையும் கற்காதவன் அறிவிலி“ என்பார் அறிஞர்.
அதுபோல வரலாறு என்பது நிகழ்வுகள் நிறைந்தது. ஒவ்வொரு நிகழ்வும் படிப்பவரின் சூழலுக்கேற்ப நிறைய படிப்பினைகளைக் கற்றுத்தரவல்லது. வரலாற்று வகுப்பறையும் அதற்கும் ஒரு படிமேலே நிற்கிறது. வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக வரலாறு பார்க்கப்படுகிறதே தவிர வாழ்விற்குதவும் படிப்பினைகள் நிறைந்த பெட்டகமாக கருதப்படுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதுபோன்று வகுப்பறை அனுபவ நிகழ்வுகள் மேலும் மேலும் கற்றலை நிலைப்படுத்த அதன் வழியாக வரலாற்றுக் கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ள இயலும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
      
‘ நன்றி ‘








                                


























                              


              





                                        













                                     














                                       

No comments:

Post a Comment