Sunday 27 September 2015

கணினியில் தமிழ் வளர்ச்சி



மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015
கணினியில் தமிழ் வளர்ச்சி
வகை : 1
தலைப்பு : இணையம் செலுத்தும் கணினி தமிழ்
முன்னுரை
       கல்வெட்டுகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் கணிப்பொறிகளில் எழுதப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கல்லிலிருந்து ஓலைக்குத்தாவி, அங்கிருந்து காகிதங்களுக்கு தாவிய தமிழ் இப்போது கணினிக்குள் நுழைந்திருப்பது தமிழ் வளர்ச்சியின் அடுத்த நிலையாகும். கணினி  வருகையால் ‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு‘ எனும் முதுமொழி மறைந்து ‘கற்றது கடுகளவு கல்லாதது கையளவு‘ எனும் புதுமொழியாக உருவெடுத்துள்ளது. இணையத்தின் வழிவகையடகக் கணினியால் தமிழரின் இணைப்பை இணைத்துவிடுகிறது.
              ‘வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
              விரல்கள் பத்தும் மூலதனம்‘ எனும்
       தாராபாரதியின் தாரக மந்திரத்தைக் கொண்டு பார்க்கும்போது அறிஞர், வல்லுநர், ஆர்வலர் போன்றோரின் உழைப்பினால் உதிர்ந்த் பூக்களாய், சிப்பிக்குள் முத்தாய் கிடைக்கும் மூலதனமே நம் கணினித் தமிழாகும். இத்தமிழின் தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வலிமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை போன்ற உண்மை நிலையினை வெளிப்படுத்துவதற்கும் இலக்கிய இலக்கண வளம், மொழியியல் வளம் பெருகுவதற்கும் கருவி என்னும் சாதனங்கள் நம் தேவைகளுக்கேற்ப பெரும் உதவி புரிந்துள்ளன. மொழியே அனைத்து செயல்பாடுகளுக்கும் பரிமாற்றம் செய்யும் பெட்டகம். மனிதனால் சாதிக்க முடியாத சாதனைகளையும் மனித மூளைக்கொண்டு கணினியில் சாதிக்க முடிகிறது. ஏனெனில் தோண்ட தோண்ட வற்றாத ஊற்றாகவும் என்றுமே ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிற நதியாகவும் மனித வாழ்க்கையின் மகத்துவத்தை அழியாமல் காத்துக்கொள்ளும் பெட்டகமாக கணினியின் பயன்பாடு இயங்கி வருகின்றது,

கணினி தமிழ் வளர்ச்சி:-
       25 ஆண்டுகளுக்கு முன்பு கணினியில் தமிழ் எழுத்துகளைத் தட்டச்சு செய்ய முடியாத நிலையிலிருந்து ரோமன் எழுத்துகளில்தான் தமிழை எழுத முடிந்தது. தமிழ் எழுத்துகளில் மாற்றிக்கொள்ளக்கூடிய வளர்ச்சியும் தமிழ் எழுத்துக்களையே நேரடியாக தட்டச்சு செய்து கொள்ளக்கூடிய வளர்ச்சியை எட்டியது.
       தற்போது உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகு தரமான யூனிகோடு (Unicode) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது. இந்த யூனிகோடு முறை மூலம் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும் பெறவும் மின்னஞ்சல்களை அனுப்பவும் எளிதாக முடியும். யூனிகோடு முறை தமிழ் இணையப் பயன்பாட்டில் ஒரு மைல்கல். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழிலேயே கணினி பயன்பாடு அமைவது மிகச் சிறந்த மாற்றத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
       இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்று வருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். தகவல் தொடர்பான ஒரு நீட்சியாகத்தான் கணினியும் இணையமும் நமக்கு நம் பணிகளை எளிதாக்கியது. இன்று எந்த ஒரு துறையும் இணையச் செயல்பாடு இன்றி இயங்குவதில்லை.
       ‘ஒரு சமூதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலிவடையும்‘ என்னும் கருத்திற்கேற்ப இணையத்தில் தமிழை பயன்பாட்டு மொழியாக்குவது சாலச் சிறந்தது.
       தமிழ் எழுத்துகளை முதன் முதலில் கணிப்பொறியில் உள்ளிட்டவர்கள் கனடாவில் வாழும் இதயம் சகோதரர்கள் ஆவர். முதலில் மின்னஞ்சல் வழி தமிழ் மொழியானது இணையத்தில் உலா வந்தது. பின் சிறிது சிறிதாக தமிழ் இணைய தளங்கள் தமிழில் உருவாகின. இதன் வழி இணையத்தில் பல அரிய தகவல்கள், செய்திகள், இலக்கியங்கள், படைப்புகள் போன்றவை தம்ழில் காணப்படுகின்றன. தமிழ் தகவல்கள் விக்கிபீடியா, வலைப்பக்கங்கள், தமிழ் திரட்டிகள், மின் நூலகங்கள், இணைய வானொலிகள், சமூக வலைதளங்கள் போன்ற தளங்களின் வழி காணக்கிடைக்கின்றன.

மொழியியல் பயன்பாட்டில் கணினித் தமிழ்:-
       கணினியால் தமிழை உலகெங்கும் பரவச் செய்ய பல வகைகளில் மொழியியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தமிழ் மொழியியலின் மூலம் எண்ணற்ற மென் பொருள்களை உருவாக்கி வருகின்றனர். உதாரணமாக தரவுகளைக் சேகரித்து அத்தரவுகளின் மூலம் மொழிப் பெயர்ப்பு செய்யவும், இலக்கணத்தை உட்புகுத்தி எழுத்து, சொல், பொருள், வாக்கியம் போன்றவை கண்டறிவதற்கும் கணினித் தமிழ் ஆய்வுகள் ஆராய்ந்து வருகின்றனர். தொன்மைக் கால ஆவணங்களைக் கணினியின் துணைக்கொண்டு முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் மொழி ஆய்வு வளர்ச்சியில் சொல்லுருபு பிழைத்திருத்தி, வாக்கிய அமைப்பு பிழைத்திருத்தி, இலக்கணப்பிழைத்திருத்தி போன்ற மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. கணினிப் பயன்பாட்டிற்கு அச்சானியாக விளங்குவது மொழி ஆகும். மக்கள் பேசும் மொழிக்கும் கணினித் தெரிந்து கொள்ளும் மொழிக்கும் வேறுபாடு உண்டு. கணினிக்கு தெரிந்த மொழி பூஜ்யம், ஒன்று இந்த இரண்டைத் தவிர வேறொன்றும் அதற்கு தெரியாது.
       எந்த ஒரு மொழியில் எழுத்துக்கள் குறைந்துள்ளதோ அம்மொழி கணினியில் முதன்மை இடமாக வகிக்கின்றது. அவ்வகையில் ஆங்கில மொழி உலகத்தில் முதன்மையாக காணப்படுகின்றது. ஆங்கில எழுத்துகளில் சிறிய எழுத்துக்கள் 26, பெரிய எழுத்துக்கள் 26, எண்கள் 0 முதல் 9 வரை உள்ள 10 எழுத்துக்கள், குறியீடுகள் 30 எழுத்துக்கள் ஆக மொத்தம் 102 எழுத்துக்களை கொண்டுள்ளதால் கணினிக்கு நிரல் நிரை படுத்துவதற்கு உகந்ததாக அமைகிறது.
       அடுத்தபடியாக தமிழ் எழுத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு தேவைப்படுகிறது. ஆங்கில எழுத்துகளைவிட குறைவானதாக நம் தமிழ் மொழி இருக்கிறது. ஆனாலும் நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர். அதனால்தான் தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம் பின்தங்கியே கிடக்கிறோம். கணினி பயன்பாட்டிற்கு தமிழ் எழுத்தான உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, ஆய்த எழுத்து 1 எண்கள் 10 எழுத்துகள் குறியீடு 30 ஆக மொத்தம் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு நிரல்நிரை செய்வதற்குத் தேவைப்படுகிறது. இதை கணினியில் உட்புகுத்தி ஆங்கிலத்தைவிட தமிழ் முன்னோடியாக திகழ்வதற்கும் தமிழ் கணினிப் பயன்பாட்டிற்கு மொழியியலை ஆய்வதற்கும் முயற்சி செய்து கன்னித் தமிழை வளர்த்தெடுப்பதற்கு ஒரு பெரும் மைல்கல்லாக அமையும்.

வலைப்பதிவுகளில் தமிழ்:-
       ஆங்கிலத்திலேயே தகவல்களை வலைப்பதிவுகளில் வழங்கும் முறை முன்பிருந்தது. அயல்நாடு தமிழர்களின் முயற்சியில் தமிழில் தகவல்களைப் பெறும் வசதி வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் இத்தகைய எளிமையான முறையை அறிமுகப்படுத்த http:/tamilblogspot.com  என்ற இணையம் மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது. அதில் சில இடையூறுகள் இருந்தன.
       தமிழ்மணம் என்ற தளம் நல்ல திரட்டியாக செயல்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் கணிமை, டெக்னோரட்டி, மாற்று சங்கமம், தமிழீழத்திரட்டி போன்ற பல திரட்டிகள் பல பதிவுகளைத் தமிழுலகிற்குத் தந்தது. திரட்டிகள் உலகெங்கும் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டி தரும் நோக்கில் செயல்படுகின்றன. இத்தகைய திரட்டிகளை தக்கவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையில்லாத செய்திகளை இப்பதிவில் இடுவது தேவையற்றது. இத்தகைய வலைப்பதிவுகளால் தமிழின் வளர்ச்சி உலகறியும் செய்யும்படி உள்ளது.

இன்றைய சமூக வலைதளம்:-
       தமிழை இன்றைய வலைதளங்களின் வழியாக எதை வேண்டுமானாலும் உடனுக்குடன் அனுப்ப முடிகிறது. உதாரணமாக பேஸ்புக், டுவிட்டர், டெலிகிராம். ஹைக் போன்ற தளங்களின் வழியாக செய்திகளையும் படங்களையும் அனுப்ப முடிகிறது. நாம் அத்தகைய தளத்தில் செய்தியை நேரடியாகவும் தமிழில் அனுப்பலாம் அல்லது வேற்று மொழிகளில் தட்டச்சு செய்தால் தமிழில் தானாகவே மொழிமாறி அனுப்பும் வசதியும் இத்தகைய வலைதளங்களில் வந்துவிட்டன. இதனால் தங்களுடைய படைப்புகளை பலர் வாசிப்பதும் அதனை விமர்சனம் செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கிறது. அறிமுகமில்லாத நபர்கள் கூட ஒரு மொழியைப் பற்றியும் அதன் சிறப்பினைப் பற்றியும் அறிய இத்தகைய சமூக வலைதளங்கள் உதவுகின்றன.

முடிவுரை:-
              யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
              இனிதாவ தெங்கும் காணோம்.
       என்பதனை இணைய வாயிலாக தமிழர்களின் இணைப்பைக் காண முடிகிறது. மேலும்
              சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
              தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

       பட்டி தொட்டிகளிலெல்லாம் தமிழின் மனம் கணினி வழி உலகமெங்கும் வீசப்படவேண்டும்.
              பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
              தமிழி மொழியிற் பெயர்த்தல் வேண்டும்,
       பிற மொழி பெயர்ப்புகள் கணினி வழிக் கண்டுணர முடிகிறது.
கணினியில் தமிழ் பயன்பாடு வந்திருந்தாலும் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியவில்லை. இதற்கு தமிழர்களாகிய நாம்தான் காரணம். ஒருவரை ஒருவர் சந்தித்தாலும் தமிழ் பேசுவதைத் தவிர்க்கிறோம். ஆங்கில மோகம் நம்மை ஆட்கொண்டுவிட்டது. கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறைந்தபட்சம் தமிழர்களை இணைக்கவாவது பயன்படும். இந்த முயற்சி தொடரவேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த முயற்சியை அறிமுகம் செய்தால். கணினி தமிழ் வளரும் தமிழின் தொன்மைச் சிறப்பு, தமிழ்ப் பொறியாளர்களின் ஆர்வம் தமிழி கணினிக்கான மென்பொருள்களின் பரவல் மற்றும் சந்தைப் படுத்துதல் அத்துடன் உலகளாவிய தமிழர்களின் தமிழ்ப்பற்று ஆகியவை கணினிப் பயன்பாட்டின் வழி தமிழின் வளர்ச்சியைத் தடுக்க இயலாத முக்கியக் காரணிகளாக அமைந்து தமிழின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

‘ நன்றி ‘

9 comments:

  1. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
  2. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்,,

    ReplyDelete
  3. கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமை! வாழ்த்துக்கள்! நன்றி

    ReplyDelete
  5. இதயம் சகோதரர்களைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

    ReplyDelete